அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றுங்கள்!” – சபாநாயகரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை.

நாடாளுமன்ற அவையில் தனக்கு அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்திருப்பதால் கவனச்சிதறல் ஏற்படுவதாகவும், எனவே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றுமாறு சபாநாயகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் சமூக ஊடகங்களிலும் தன்னை பகிரங்கமாக அவமதித்து, வன்முறையால் அச்சுறுத்தல் விடுப்பதாகக் குற்றம் சாட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றக் கோரி சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கேள்விக்குட்பட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு சுயேச்சைக் குழுவிலிருந்து முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும், பொதுவாக, அனைத்து மூத்த தலைவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிறகே அத்தகைய உறுப்பினர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
இருப்பினும், வழக்கமான மரபுக்கு மாறாக, இந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமர அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சுட்டிக்காட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், இந்த விவகாரத்தில் தலையிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றுமாறு சபாநாயகரிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.




