போட்டியின் நடுவே காதலிக்கு மெசேஜ் – தமிழக வீரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

போட்டியின் போது தனது காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பியதற்காகப் பிடிபட்ட தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவர், விதிக்கப்படவிருந்த இரண்டு ஆண்டுத் தடையிலிருந்து தப்பித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின்போது, வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் பகுதி (PMOA) நெறிமுறையை மீறியதற்காக, 26 வயதான இடது கை மட்டையாளருக்கு பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவு (ACSU) 100,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
போட்டியின் போது அந்த வீரர் தனது காதலிக்கு கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தது கண்டறியப்பட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த கிரிக்கெட் வீரர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை என்றாலும், போட்டியின் போது PMOA மைதானத்திற்குள் கைபேசிகளைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதுடன், அது ஒரு நெறிமுறை மீறலாகவும் கருதப்பட்டது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அந்த வீரரின் அடையாளத்தை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை. இருப்பினும், அவர் ஒரு இடது கை மட்டையாளர் என்றும், கடந்த ரஞ்சி கோப்பைத் தொடரின் போது தமிழ்நாடு அணிக்காக இரண்டு அரை சதங்களை அடித்தவர் என்றும் அது உறுதிப்படுத்தியுள்ளது.
அறிக்கையின்படி, அதிகாரிகள் ஆரம்பத்தில் அந்த வீரருக்கு இரண்டு வருடத் தடை விதிக்கப் பரிசீலித்திருந்தனர்.
இருப்பினும், குற்றத்தின் தன்மையையும், ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லாததையும் கருத்தில் கொண்டு, அந்த வீரர் இறுதியில் ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் விடுவிக்கப்பட்டார்




