பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி விவகாரம் : மாணவர்கள் போராட்டம்
சுதந்திர தினத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடி...........
சுதந்திர தினத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடி இறக்கி கறுப்பு கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று பல்கலைக்கழக முன்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த 10 ஆம் திகதி பொலிஸார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து, துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் சுமார் மூன்று மணி நேர விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
பல்கலை வளாகத்திற்குள் பொலிஸார் வாகனத்தில் நுழைந்தமை மற்றும் நிர்வாக அதிகாரிகளிடம் நீண்ட நேர விசாரணைகள் நடத்தப்பட்டமைக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மூவரை கடந்த 17ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை வழங்கப்பட்டிருந்தது. எனினும், அவர்கள் அதில் பங்கேற்கவில்லை.
மாணவர்கள் தெரிவிப்பதாவது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணிப்பின் கீழ் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, தங்களது நிலைப்பாடுகள் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொலிஸார் தனித்தரப்பாக மாணவர்களை விசாரணைக்கு அழைப்பது அச்சுறுத்தும் நடவடிக்கையாகும் என குற்றம் சாட்டியுள்ளனர்.