போதைப்பொருள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது : ம.ஜெகதீஸ்வரன்

போதைப்பொருள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கணிசமான அளவு தாக்கத்தை

Published September 9, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 5 min read

போதைப்பொருள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

எங்களுடைய அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கியமான மூன்று முடிவுகளை ஐந்து வருடங்களுக்குள் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்திருந்தோம். வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் ஸ்ரீலங்கா மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா ஆகும்.

குறிப்பாக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் வெறுமனவே சூழலை மட்டும் சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமூகத்திலே காணப்படுகின்ற இளவயது மதுபாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை, விற்பனை போன்றவற்றை இவ் ஐந்து வருடத்தில் முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளோம்.

அந்தவகையிலே எங்களது செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தப்பிச் சென்ற குறற்வாளிகளை சர்வதேச பொலிஸார் மற்றும் வெளிநாடுகளின் உதவியுடன் கைது செய்து எமது நாட்டிற்கு கொண்டுவந்து விசாரணை செய்ததன் மூலமாக போதைப்பொருள் உற்பத்தி நிலையங்களை கண்டுபிடித்துள்ளோம்.

இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக சட்டத்துக்குட்பட்டு, நீதியான நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பொலிஸார் மற்றும் புலனாய்வு துறையினருக்கு பூரண சுதந்திரத்தை வழங்கியதன் மூலமாக இவ்வாறானவர்களை தொடர்ச்சியாக கைதுசெய்து வருகின்றோம்.

மேலும் குறித்த போதைப்பொருள் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணையின் போது அரசியல்வாதிகளும், கடந்த காலத்திலே ஆட்சிபுரிந்த அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதேவேளை கடந்த கால அரசாங்கத்தினுடைய தொடர்புபட்ட முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் தொடர்புபட்டதாக அறிய முடிகின்றது.

அந்தவகையில் கடந்த காலங்களிலே போதைப்பொருள் பாவனை இந்த நாடு முழுவதும் வியாபித்து இருந்தது மட்டுமல்லாது கடந்தகால அரசாங்கத்தினுடைய அனுசரணையுடனோ அல்லது குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளினுடைய ஒத்துழைப்போடு நடந்திருப்பதற்கான வாய்ப்பிருக்கின்றது என்பதற்கு போதைப்பொருள் வர்த்தகமானது இலங்கை முழுவதும் வியாபித்திர்ந்து என்பதுடன் இச்செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக நடமாடும் நிலை காணப்பட்டிருந்தது.

இதேவேளை இளைஞர், யுவதிகள் தங்கள் வாழ்க்கையை தொலைத்துடன், எதிர்காலத்தை இழககும் நிலைக்கு இவ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி இருந்தனர். குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இது எதிர்கால சந்ததியினருக்கும், எதிர்கால இலங்கைக்கும் இருள் மயமான சூழலை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் எமது அரசாங்கம் இது தொடர்பான விசாரணையினை முன்னெடுத்துள்ளோம். அந்தவகையிலே இதில் யார் ஈடுபட்டிருந்தாலும் அரசியல்வாதிகளால் இருந்தாலும் சரி அது யாராக இருந்தாலும் சரி நாங்கள் கவலைப்படப்போவதில்லை என்பதோடு சரியான விசாரணை மற்றும் சாட்சியங்களோடு நிரூபிக்கப்படுபவர்களை நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களிற்கான தண்டனையினை வழங்கி வைப்போம் என தெரிவித்தார்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *