எரிமலைச் சாம்பல் அபாயம்; இலங்கை நோக்கிய வான்வழிக்கும் கட்டுப்பாடு!

கொழும்புக்கும் ஜகார்த்தாவுக்கும் இடையே இன்று (07) இயக்கப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ‘அனக் கிரக்கடாவ்’ (Mount Anak Krakatau) எரிமலை சீற்றமடைந்ததால், அதிலிருந்து சாம்பல் மற்றும் பாறைத் துகள்கள் வானில் கலந்ததால் விமானப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதே இதற்குக் காரணமாகும்.
கொழும்பில் இருந்து ஜகார்த்தா செல்லவிருந்த UL 364 விமானமும், ஜகார்த்தாவில் இருந்து கொழும்பு வரவிருந்த UL 365 விமானமும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், எரிமலை சாம்பல் மற்றும் சிலிக்கா கொண்ட பாறைத் துண்டுகள் வளிமண்டலத்தில் கலப்பதால் விமான இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குக் கடும் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், இந்தோனேசிய சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையால் ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹத்தா (Soekarno-Hatta) சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இலங்கை நோக்கிய மேற்கு வான் வழித்தடம் வழியாக மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்னில் இருந்து வந்த இரண்டு ஸ்ரீலங்கன் விமானங்கள், பாதிக்கப்பட்ட வான்வெளியைத் தவிர்ப்பதற்காக நேற்று இரவு மாற்று வான் வழிகளுக்குத் திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.




