UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) பிரதிநிதிகள், ஜூன் 30 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.
UNFPA தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புகளில் அந்த அமைப்பு வழங்கி வரும் தொடர்ச்சியான பங்களிப்பையும் ஆதரவையும் பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்த அவர்களின் கலந்துரையாடலின் போது, பாலின அடிப்படையிலான வன்முறைகள் இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய UNFPA பிரதிநிதிகள், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான விரிவான கொள்கை ரீதியான தீர்வுகளை உருவாக்குவதில் தமது அமைப்பு மேற்கொண்டு வரும் முயற்சிகளை விளக்கிக் கூறினர்.
இலங்கை பல முக்கிய குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ள போதிலும், அந்தச் சாதனைகளைத் தக்கவைப்பதும் அவற்றை மேலும் முன்னெடுத்துச் செல்வதும் அவசியமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குதல், நன்கொடையாளர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே இனப்பெருக்க ஆரோக்கிய சேவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் கலாநிதி Aleksandar Sasha Bodiroza, UNFPA இன் பதில் பிரதிநிதி Phuntsho Wangyel உள்ளிட்ட தூதுக்குழுவினர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த, ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சசிகா சோமரத்ன மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.




