நாடு முழுவதும் டெங்கு அச்சுறுத்தல் – புதிய எண்ணிக்கை வெளியானது!

இலங்கையில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90,000 என்ற எல்லையை நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு இன்று (09) வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,395 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய (08) தரவுகளின் அடிப்படையில், இதுவரையில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆகப் பதிவாகியுள்ளது.
கடந்த 6 மாத காலத்தில் பதிவான மொத்த நோயாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். மேல் மாகாணத்தில் 47,310 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதன் சதவீதம் 52.92% ஆகும்.
அத்துடன், மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டமே தொடர்ந்தும் அதிக பாதிப்பைச் சந்தித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அம்மாவட்டத்தில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 19,000 ஐக் கடந்துள்ளது (19,007).
கொழும்பு மாவட்டத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 17,725 ஆக உயர்ந்துள்ளதுடன், மூன்றாவது அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 6,341 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவ்வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியிருந்தனர். அந்த எண்ணிக்கை 29,973 ஆகும்.
எனினும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் 8 நாட்களில் மட்டும் 4,048 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




