கண்டி நகரில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்!

வருடாந்த கண்டி எசல பெரஹர ஊர்வலத்தை முன்னிட்டு, நாளை (18) முதல் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தைச் செயற்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெரஹர பருவகாலம் முழுவதிலும் இந்த விசேட ஏற்பாடுகள் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
கும்பல் பெரஹர நாளை ஆரம்பமாகி ஒகஸ்ட் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், ரந்தோலி பெரஹர ஒகஸ்ட் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த விசேட திட்டமானது போக்குவரத்து கட்டுப்பாடு, வீதி மறிப்பு கடமைகள், பாதுகாப்பு சோதனைகள், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் சோதனை, சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டல் மற்றும் ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களின் நிர்வகிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.
பெரஹர காலத்தில் பாதுகாப்பு கடமைகளுக்காக 6,200 பொலிஸ் அதிகாரிகள், 564 விசேட அதிரடிப் படையினர், முப்படையைச் சேர்ந்த 1,200 பேர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த 29 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக பொலிஸ் மோப்ப நாய் பிரிவுகளும் ஈடுபடுத்தப்படவுள்ளன.
தலதா பெரஹர காலத்தில் கண்டி நகரத்திற்கான 14 நுழைவுப் புள்ளிகளை உள்ளடக்கிய வகையில் வீதி மறிப்பு கடமைகள் மூலம் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரஹரவைப் பார்வையிட வருகை தரும் மக்களுக்காக 13 வாகன நிறுத்துமிடங்கள் குறிக்கப்பட்டு ஒதுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவற்றில், இலகு ரக வாகனங்களுக்கு ஆறு நிறுத்துமிடங்களும், கன ரக வாகனங்களுக்கு ஏழு நிறுத்துமிடங்களும் ஒதுக்கப்படும்.
பெரஹர காலத்தில் கண்டி நகரத்திற்குள் பிரவேசிக்காமல் இப்பகுதி ஊடாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்காக பொலிஸார் மாற்றுப் பாதைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.




