எல் நினோ தாக்கத்தால் தீவிரமடையும் வறட்சி!

உலகில் தீவிர வானிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய எல் நினோ நிகழ்வு காரணமாக எதிர்காலத்தில் கடுமையான ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால், அதற்கு அனைவரும் தயாராக இருக்குமாறு பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் புத்தி மாரம்பே எச்சரித்துள்ளார். பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் ஆரம்பமாகியுள்ள இந்நிகழ்வு தற்போது பலவீனமான மட்டத்தில் காணப்பட்டாலும், எதிர்காலத்தில் பலமடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் நாட்டில் வறண்ட காலநிலை நிலவுவதுடன் நீர்நிலைகள் வற்றிப் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் பெரும் போக நெற்செய்கையை ஒக்டோபர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க கோரியுள்ளதுடன், எல் நினோ தாக்கங்களை எதிர்கொள்ளத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. எனினும், அனர்த்த முகாமைத்துவ நிதியம் இன்னமும் முறைப்படி செயற்படவில்லை என்பதும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.




