நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!

இலங்கை நாடாளுமன்றத்தின் நடுநிலைமை மற்றும் உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளார்.
பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் தலைவர் ரெபில்வே மத்ஷ்வேனி-த்சிபானே (Refilwe Mtshweni-Tsipane) மற்றும் பொதுச்செயலாளர் ஸ்டீபன் ட்விக் (Stephen Twigg) ஆகியோருக்கு இந்த முறைப்பாட்டுக் கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்ப சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அனுமதி மறுத்தமை தொடர்பில் அந்தக் கடிதத்தில் பிரதானமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே, தயாசிறி ஜயசேகர இந்த சிறப்புரிமைப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்ப முற்பட்டுள்ளார்.
தான் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தில் தானே நீதிபதியாகச் செயற்பட முடியாது என்ற அடிப்படைச் சட்டக் கோட்பாட்டை மீறி, குறித்த முறைப்பாட்டை நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு அனுப்பாமல் சபாநாயகர் தாமே ஆராய முற்பட்டது நடைமுறை நியாயத்திற்கும் நிறுவன நடுநிலைமைக்கும் முற்றிலும் எதிரானது என தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், விவாதத்தின் போது இந்த விவகாரத்தை எழுப்புவதைத் தடுத்ததன் மூலம் தனது பேச்சுரிமை முடக்கப்பட்டுள்ளதாகவும், 1953 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள சுதந்திரமாகப் பேசும் உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, சர்வதேச அமைப்பான பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம் இதில் உடனடியாக தலையிட்டு, இலங்கையின் நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குறித்த சிறப்புரிமைப் பிரச்சினையை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப உரிய வழிகாட்டல்களை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.




