சுகாதாரத்துறையில் 2,652 பேருக்கு புதிய நியமனங்கள்

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணி உதவியாளர்கள், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 2,652 பேருக்கு அடுத்த மாதத்திற்குள் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் இலவச சுகாதார சேவை அமைப்பின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், நீண்ட காலத்திற்குப் பின்னர் நிலவும் இந்த வெற்றிடங்கள் பல கட்டங்களின் கீழ் நிரப்பப்படவுள்ளன.
இதற்கமைய, முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் 627 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை (04) வழங்கப்படவுள்ளன. தொடர்ந்து, ஜூலை 16 ஆம் திகதி 247 அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்களுக்கும், ஜூலை 18 ஆம் திகதி இரண்டாம் கட்டமாக 600 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. மேலும், ஒகஸ்ட் 01 ஆம் திகதி மூன்றாம் கட்டமாக 762 சுகாதாரப் பணி உதவியாளர்கள், 295 கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மற்றும் 121 சிற்றூழியக் கட்டுப்பாட்டாளர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.




