பொலிஸ் நற்சான்றிதழ் சேவை தற்காலிகமாக முடக்கம்!

பொலிஸ் தலைமையகத்தினால் விநியோகிக்கப்படும் நற்சான்றிதழ்கள் தொடர்பான தரவுக் கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லை, சுஹுருபாய கட்டடத்தின் 17 ஆவது மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவினால் இந்தச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுவதுடன், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது, அறிக்கைகளைக் கோருவது மற்றும் சான்றிதழ்களை அச்சிடுவது ஆகியன குறித்த தரவுக் கட்டமைப்பின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
எவ்வாறாயினும், அந்தத் தரவுக் கட்டமைப்பானது நேற்று (20) பகல் 12.50 மணி முதல் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகிறது.
இந்தக் கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவருவதற்காக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திற்கு (ICTA) அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைவாக, தரவுக் கட்டமைப்பு சீரமைக்கப்படும் வரை நற்சான்றிதழ்களுக்காக விண்ணப்பிக்க வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தரவுக் கட்டமைப்பு வழமைக்குத் திரும்பியவுடன் நற்சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.



