பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் யேமனின் ஹவுதி அமைப்பினர் பொப் அல்-மந்தேப் (Bab el-Mandeb) நீரிணையில் அமைந்துள்ள மிக முக்கிய மூலோபாய தீவான ‘பெரிம்’ (Perim Island) பகுதியைக் கைப்பற்றியுள்ளனர்.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசுப் படைகள் பெரிம் தீவிலிருந்து பின்வாங்கியுள்ளன.
அத்துடன் இந்தத் தீவுக்கு எதிரே உள்ள செங்கடல் கடற்கரை நகரான துபாப் (Dubab) பகுதியையும் ஹவுதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்ட சூழலில் செங்கடலின் நுழைவாயிலான பொப் அல்-மந்தேப் நீரிணையையும் ஹவுதிகள் கைப்பற்றுவது ஈரானுக்குப் பெரும் பலமாக அமையும் என அஞ்சப்படுகிறது.
இது உலகளவில் எண்ணெய் விலையை மேலும் உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், சவூதி அரேபியாவின் ‘கிழக்கு-மேற்கு’ (East-West) எண்ணெய் குழாய்ப் பாதை மீது ஈராக்கிலிருந்து நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலால் அது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைக்கு மாற்றாகச் சவூதி அரேபியா பயன்படுத்தி வந்த ‘கிழக்கு-மேற்கு மசகு எண்ணெய் குழாய்ப் பாதையின் ரியாத் மற்றும் மதினா பகுதியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்;டுள்ளது.
எனினும் ஈராக் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தற்போது பதில் தாக்குதல் நடத்துவதைத் தவா்த்துள்ளதாக சவூதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருந்தபோதும். தனது பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை தனக்கு உள்ளதாகவும் சவூதி எச்சரித்துள்ளது.




