ஈரானுக்கு மீண்டும் அமெரிக்கா தடைகள்… உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு!

ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி மீது மீண்டும் தடைகளை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற வர்த்தகக் கப்பல்களை ஈரான் தாக்கியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 5%க்கும் மேல் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 75 அமெரிக்க டாலராகவும், ஒரு பேரல் அமெரிக்க WTI கச்சா எண்ணெயின் விலை 72 அமெரிக்க டாலராகவும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நேற்று (07), ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற கப்பல்களை ஈரானிய புரட்சிகர காவலர் படை தாக்கியது. இதற்குப் பதிலடியாக, ஈரானிய புரட்சிகர காவலர் படையின் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், ஈரான் பதிலடி கொடுத்து, அண்டை அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது எதிர்த்தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே சமீபத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்பில், ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்திருந்தது. அதன்படி, ஆகஸ்ட் 21 வரை ஈரான் எண்ணெய் விற்பனை செய்ய அமெரிக்க கருவூலம் அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற கப்பல்களை ஈரான் தாக்கியதைத் தொடர்ந்து, ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு எதிராக மீண்டும் தடைகளை விதிக்க அமெரிக்க கருவூலம் முடிவு செய்தது. மேலும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உடனடியாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



